சேரமான் பெருமாள் நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
1. பொன்வண்ணத்தந்தாதி
169
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
1
170
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே.
2
171
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே.
3
172
பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்
சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.
4
173
தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே.
5
174
இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே.
6
175
கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம்
ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம்
ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே.
7
176
உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே.
8
177
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே.
9
178
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே.
10
179
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலர
அஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே.
11
180
வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே.
12
181
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென்
றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே.
13
182
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.
14
183
அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே.
15
184
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே.
16
185
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே.
17
186
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன
மேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.
18
187
பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு
வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன
போதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே.
19
188
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.
20
189
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.
21
190
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர்
ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.
22
191
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.
23
192
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே.
24
193
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே.
25
194
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே.
26
195
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.
27
196
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்த
கரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே.
28
197
கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்த
புண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே.
29
198
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே.
30
199
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டு
மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே.
31
200
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.
32
201
பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன்
உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.
33
202
உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப்
பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே.
34
203
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு
கலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.
35
204
பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண்
வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.
36
205
துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.
37
206
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.
38
207
தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கை
வாமுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.
39
208
முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே.
40
209
சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.
41
210
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்த
கல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே.
42
211
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே.
43
212
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென்
உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே.
44
213
காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே.
45
214
அந்தணராம் இவர்ஆருர் உறைவதென் றேன்அதுவே
சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே.
46
215
கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே.
47
216
பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக்
காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே.
48
217
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான்
அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.
49
218
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே.
50
219
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார்
சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்
தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.
51
220
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே.
52
221
முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே.
53
222
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே.
54
223
ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம்
காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே.
55
224
கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னே
தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே.
56
225
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால்
பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பெளவந்தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு மால்அரன் ஆயினனே.
57
226
ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டஎம் ஆயிழைக்கே.
58
227
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்ற திற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.
59
228
கூடிய தன்னிடத் தான்உமை யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடியநீறுசெஞ் சாந்திவை யாம்எம் அயன்எனவே.
60
229
அயமே பலிஇங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம் அம் மாஉம்மை நாணுதுமே.
61
230
நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாம்எழுத
ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமின்என்றும்
பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால்
காணாவிடேன்கண்டி ரவா தொழியேன் கடிமலரே.
62
231
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரஒட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்கழ கல்லஎன்பன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே.
63
232
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்கும்அன்றிக்
கிடங்கினிற் பட்ட கராஅனை யார்பல கேவலரே.
64
233
வலந்தான் கழல்இடம் பாடகம் பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந் தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம் வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழல்இடம் சங்கரற்கே.
65
234
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன் நெஞ்சம் எரிகின்றதே.
66
235
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணிஒக்கின்றதத் தோணிஉய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தால்அத்திறல் அரவே.
67
236
அரவம் உயிர்ப்ப அழலும்அங் கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழல்உமை ஊடற்கு நைந்துறு கும்அடைந்தோர்
பரவும் புகழ்அண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும்
விரவும் இடர்இன்பம் எம்இறை சூடிய வெண்பிறையே.
68
237
பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும் நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாய்அர வாடலுற்றோ
குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே.
69
238
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே.
70
239
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே
எமையாளு டையான் தலைமக ளாஅங் கிருப்பஎன்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.
71
240
உறைகின் றனர்ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால்
மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே.
72
241
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைத்
கடிக்கண்ணி யாய்எமக் கோருர் இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே.
73
242
குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன் நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே.
74
243
குழிகட் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடைஊன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல்கண்டன் ஆடும் கடியரங்கே.
75
244
அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர் கூற்றம் மதியம் அந்தீச்
சரங்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள்தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம்
சிரங்கா முறுவான் எலும்புகொள் வான்என்றன் தேமொழிக்கே.
76
245
மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச் சங்கம்
அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்உயிர்மேல்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.
77
246
கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே.
78
247
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோள்இழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோஉடைத் தோலோ பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே.
79
248
கடவிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தால்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட் கவலங் கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே.
80
249
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லும்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாம்என்று பாவிப்பனே.
81
250
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கம் எங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாள்அம்மெல் லோதிக்குச் சந்தித்தவே.
82
251
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னான்அடி யார்களுக் காவனவே.
83
252
ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே.
84
253
செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோரும்ஏத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக்காணப் பெரிதும் கலங்கியதே.
85
254
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்வியந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே.
86
255
எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே.
87
256
கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி
சிலைஇவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொற்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்தார்நின்ற மேருஎன்னும்
மலைபிழை யார்என்ப ரால் அறிந் தோர்கள்இம் மாநிலத்தே.
88
257
மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையஅத் தேவர்எல்லாம்
ஆனலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங னேஇனிப் பாடுவதே.
89
258
பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல்ஒத்த
தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தால்உமை பாகம்எம் கொற்றவற்கே.
90
259
கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே.
91
260
சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.
92
261
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே.
93
262
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்விஅண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.
94
263
வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென் பரால்
யாரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே.
95
264
பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனஅடியார்க்
கரியான் இவன்என்று காட்டுவன் என்றென் றிவைஇவையே
பிரியா துறையும் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே.
96
265
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதை நல்லாள்
காய்சின வேட்கை அரன்பாலது அறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால் இவைஒன்றும் பொய்யலவே.
97
266
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.
98
267
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி அவாஅழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.
99
268
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும் கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே.
100
சிறப்புப் பாயிரம்
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்தந்தாதி வழங்கிதுவே.
101
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

சேரமான் பெருமாள் நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
2. திருவாரூர் மும்மணிக் கோவை
அகவற்பா
269
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு
இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்

கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்

கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப்

பொங்குபுனல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.
1
வெண்பா
270
மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்த
கனமால் விடையுடையோன் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்
கான்றனநீர் எந்திழையாள் கண்.
2
கட்டளைக் கலித்துறை
271
கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனஇருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயி லால்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே.
3
அகவற்பா
272
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு

கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலும் கோபமோடு
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமேல் அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்

கங்குலும் பகலும் காவில் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்று
உலவா நல்வரம் அருளிய உத்தமன்

அந்தண் ஆருர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.
4
வெண்பா
273
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.
5
கட்டளைக் கலித்துறை
274
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆருர் அனைய அணங்கினுக்கே.
6
அகவற்பா
275
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல்

வானர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து

அல்லியங் கோதை அழலுற் றாஅங்கு
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
வளமலி கமல வாள்முகத்து

இளமயிற் சாயல் ஏந்திழை தானே.
7
வெண்பா
276
இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்
உழையாகப் போந்ததொன் றுண்டே - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆருர்க்கோன் அன்றுரித்த
கைம்மானேர் அன்ன களிறு.
8
கட்டளைக் கலித்துறை
277
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்த
பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்சகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே.
9
அகவற்பா
278
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்ளறி கொடுமை உரைப்ப போன்றன

சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றிஃது

அன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆருர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரற்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்

பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
10
வெண்பா
279
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்கி
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போலொருவன் வந்து.
11
கட்டளைக் கலித்துறை
280
வந்தார் எதிர்சென்று நின்றேன் கிடந்தவண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில் லேன்தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா வனஞ்சூழ் குளிர்புனத்தே.
12
அகவற்பா
281
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதல னாக
விடுசுடர் நடுவுநின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து

வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்

பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்

ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
13
வெண்பா
282
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தா ளாக- பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ஆரூர் சூழ்ந்த தடம்.
14
கட்டளைக் கலித்துறை
283
தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே.
15
அகவற்பா
284
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரம்முரம் பதரும் அல்லது படுமழை
வரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை செல்ல மானினம்

அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற

குன்ற வேய்களும் கூற்றடைத் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆருர் அமர்ந்துறை அமுதன்

கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி ஆயின குரவே.
16
வெண்பா
285
குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.
17
கட்டளைக் கலித்துறை
286
கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கே
முடிமல ராக்கிய முக்கண்நக் கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே.
18
அகவற்பா
287
மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்

பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுன லூரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்து

கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மி லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதி முர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆருர் ஆவணத்

துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அணைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
19
வெண்பா
288
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலாஇங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தன் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.
20
கட்டளைக் கலித்துறை
289
பொய்யால் தொழினும் அருளும் இறைகண்டம் போலிருண்ட
மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்லல்நில் புல்லல் கலைஅளையல்
ஐயா இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியதே.
21
அகவற்பா
290
அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து
ஒருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி

அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை

வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்

தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செம்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
22
வெண்பா
291
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே நீள்இருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீஅரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட் கன்பமைத்த
செய்வான்நல் ஊரன் திறம்.
23
கட்டளைக் கலித்துறை
292
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினர் எங்கையர்க்கே
மறமலி வேலோன் அருளுக வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேஎழினும்
நறைமலி தாமரை தன்னதென் றேசொல்லும் நற்கயமே.
24
அகவற்பா
293
கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபட
இயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்

குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்

தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்கும் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்

அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே.
25
வெண்பா
294
ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்தப் பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
26
கட்டளைக் கலித்துறை
295
புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத் தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத் தருமே.
27
அகவற்பா
296
உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால்நீர் ஓழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்

வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்து

இடாஅ ஆயமோ டுண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோவென
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி

பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்கம் எல்லாந் தானா யினளே.
28
வெண்பா
297
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆருர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
29
கட்டளைக் கலித்துறை
298
தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற் கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே.
30
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

சேரமான் பெருமாள் நாயனார் அருளியது
பதினோராம் திருமுறை
3. திருக்கயிலாய ஞானவுலா
கலிவெண்பா
தலைவன் புகழ்
299
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்
கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்
ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா தணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே - பரனாய
5
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டி
எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள்
10
பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர்
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த
15
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்
கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்ன
வீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடைய
எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு
20
கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல்
 
இறைவன் புறப்பாடு
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் அகத்தியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
25
நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம்
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்
ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த
கங்கா நதியமுனை உள்ளுருத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய
30
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர்
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார்
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய
35
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் . மன்னிய
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர்
40
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல்
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
45
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த
காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
50
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள்
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி
55
போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும்
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே
 
மகளிர் குழாங்கள்
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்
வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ
டூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா
60
வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில்
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும்
கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளிய
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற்
65
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின்
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள்
70
ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம்
ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித்
தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற்
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த
75
பேதை
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில்
இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்
கெளவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும்
80
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்
பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய
85
பெதும்பை
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய
தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு
காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவு
முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற்
சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து
90
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட
மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்
கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சா
மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க்
காமன் உருவம் வரஎழுதிக் - காமன்
95
கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும்
ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
 
மங்கை
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய
100
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு - மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து - மாதராள்
105
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்
தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்
தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான்
தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா
110
துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
 
மடந்தை
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும் - பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
புருவமுஞ் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய
115
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
முத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப் பெருகி - வித்தகத்தால்
கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட்
டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய
120
காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
தண்ணறுஞ் சந்தனம் கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங் - கொண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்
விடவண்ணக் கண்டத்து வேதியன் மேல்இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதீண் - டடல்வல்ல
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல
125
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்த
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே
செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய்
சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்
காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம்
130
புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையே
அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி
 
அரிவை
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழல்
திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர்
மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும்
135
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேற்
பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்
பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள்
140
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே
பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையுங் கைவிட்டுப் - பொன்னனையீர்
இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற்
145
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்
றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி
 
தெரிவை
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா
மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள் - அருளாலே
150
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்து
அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள் - அந்தமில்
சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் -வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர்
155
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால்
சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
160
காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து
உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறுங் கருங்குழலாள் - தெள்ளொளிய
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார்
165
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும்
தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய
நாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லை
ஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும்
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய
தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல்
170
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
 
பேரிளம்பெண்
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக்கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத
175
பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி
வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்
கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த
கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற்
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த செழும்பவளம் - காய்த்திலங்கி
180
முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
தண்ணங் கயலும் சலஞ்சலமுந் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப்
185
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது காணா செவிஅவன
தெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா - அண்ணல்
கழலடி அல்லது கைதொழா அஃதான்று
அழலங்கைக் கொண்டான்மாட் டன்பென் - றெழிலுடைய
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
190
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற்
கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
195
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.
197
காப்பு
பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.
 
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com